இரும்பு மனிதர் போட்டியில் வென்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி
டில்லி
முதல் முறையாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் (மேஜர் ஜெனரல் வி டி டோக்ரா) இரும்பு மனிதர் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இரும்பு மனிதர் போட்டி என்பது மூன்று விளையாட்டுகளை ஒன்றடக்கிய டிரயலத்லான் போட்டி ஆகும். இந்த போட்டியில் ஒரு நாளில் 17 மணி நேரத்துக்குள் மூன்று வித போட்டிகளில் கலந்துக் கொள்ள வேண்டும். அதாவது 3.8 கிமீ தூர நீச்சல் போட்டி, 180 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டும் போட்டி மற்றும்42.2 கிமீ தூர ஓட்டப் பந்தயம் ஆகியவைகளை குறிப்பிட்ட 17 மணி நேரத்தில் முடிக்க வேண்டும்.
இந்த போட்டி ஆஸ்திரிய நாட்டின் கிளாஜென்ஃபர்ட் நகரில் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து 3000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் வி டி டோக்ரா வும் ஒருவர் ஆவார். அவர் இந்தப் போட்டியை 14 மணி நேரம் 21 நிமிடங்களில் முடித்து இரும்பு மனிதர் விருதை பெற்றுள்ளார்.
ஒரு இந்திய ராணுவ அதிகாரி இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். அவருக்கு சக அதிகாரிகளிடம் இருந்தும் மேலதிகாரிகளிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.