சென்னை:

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வயலில் இறங்கி வேலை செய்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் பொங்கலையொட்டி, தனது சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்தார். அப்போது, அங்குள்ள தனது வயலில் இறங்கி விவசாயப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் வயலில் வேலை செய்வது போலவும் மற்றும் நெற்கதிரை அரிவாளால் அறுத்து கையில் வைத்துள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், எடப்பாடியின் புகைப்படத்தை கண்ட, இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்து, அத்துடன் தனது கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார்.

அதில்,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஒரு விவசாயி என்பதை மறக்கவில்லை என்றும், அவர்  வயலில் இறங்கி வேலை செய்வது போன்ற புகைப்படம் நிச்சயம் மக்களை ஈர்க்கும். இதை மனதில் கொண்டு, விவசாயத்தை லாபகரமாகவும் மற்றும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தொழிலாகவும் மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை என தெரிவித்து உள்ளார்.