சென்னை,

என்ஜிசிக்கு எதிராக பிரசாரம் செய்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியாகும் எண்ணையால்,  விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மத்திய மாநில அரசுகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து பலவேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது.

அதைத்தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக பிரசாரம் செய்தாக, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த  திலக், அன்புச்செல்வன், உத்தமன் ஆகியோரை முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.