கோலாலம்பூர்: தனது நாட்டு சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, விசா இல்லாமலேயே மலேசியா வந்துசெல்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த சலுகையின்படி, இந்தியப் பயணிகள் 15 நாட்கள் வரை விசா எதுவுமின்றியே மலேசியாவில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த புதிய சலுகையின்படி, மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள், தங்களின் பெயரை உள்நாட்டிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்ததிலிருந்து 3 மாதங்களுக்குள் மலேசியாவிற்கான சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும். அப்படி செல்லும்போது, இந்தியாவிற்கு அல்லது வேறுநாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட்டையும் வைத்திருப்பது கட்டாயம்.

இந்த திட்டம் 2020ம் ஆண்டு முழுவதும் நடைமுறையில் இருக்கும். ஒருமுறை மலேசியா வந்து திரும்பிய பின்னர், மீண்டும் மலேசியா செல்ல வ‍ேண்டுமானால், 45 நாட்கள் காத்திருக்க வேண்டும் இத்திட்டத்தில். இதேபோன்ற சலுகையை சீன நாட்டிற்கும் அறிவித்துள்ளது மலேசியா.