கொச்சி:

முதுகில் குத்துவது மலையாளிகளின் டிஎன்ஏ-வில் உள்ள பொதுவான குறைபாடு என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கேஜே. அல்போன்ஸ் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியின் விபரம் வருமாறு:

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது கொடுத்ததற்கு, கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

விஞ்ஞானத்துக்கு பத்மபூஷன் விருது கொடுக்கும் அளவுக்கு அவர் என்ன பெரிதாக சாதித்து விட்டார் என கேள்வி எழுப்பியிருந்த அவர், இனி கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் பத்மபூஷன் கிடைக்கும் என்று நம்பலாம் என தெரிவித்திருந்தார்.

நாட்டின் ரகசியத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் நம்பி நாராயணனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மன உளைச்சல் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒருவர் தான் டிஜிபியாக இருந்த சென்குமார்.

இது குறித்து கேரளாவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான கேஜே. அல்போன்ஸ் கூறும்போது, நான் விசாரித்தவரை நம்பி நாராயணன் சிறந்த விஞ்ஞானியாகத்தான் திகழ்ந்திருக்கிறார். அவர் வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டார்.

தற்போது அவருக்கு விருது கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மலையாளி சாதித்ததை மனம் திறந்து பாராட்டும் குணம் மற்றொரு மலையாளிக்கு இல்லை. எல்லாவற்றையும் இருளில் இருந்து கொண்டே பார்ப்பார்கள்.
முதுகில் குத்துவது மலையாளிகளின் டிஎன்ஏ-வில் உள்ள பொதுவான குறைபாடு என்றார்.