கோலாலம்பூர்: இந்த 2019ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும், மலேசிய நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக 5,272 வங்கதேச நாட்டவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 1 முதல் ஜுன் மாதம் 4ம் தேதி வரையான புள்ளிவிபரம் இது. மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

மலேசியாவின் குடியேற்ற துறையினர், நாடு முழுவதும் 7,940 நடவடிக்கைகளை மேற்கொண்டு, 1,00,000 வெளிநாட்டவரின் ஆவணங்களை சரிபார்த்தனர். அவர்களில், முறையான ஆவணங்கள் வைத்திராத குற்றச்சாட்டிற்காக 23,295 வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுள், 8,011 பேர் இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர்கள். 5,272 பேர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றபடி, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாட்டினரும் அடக்கம்.

மேலும், கடந்த 5 மாத காலகட்டத்தில் மட்டும், சட்டவிரோதமாக தங்கியிருந்த 26,116 வெளிநாட்டவர்கள் அவரவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.