பிரதமர் நஜிப் – கேலிச்சித்திரம்

கோலாலம்பூர்:

லேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்த ஓவியருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது   நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது, பாஹ்மி ரேசா மீது ஆபாசமான, தவறான, அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற, ஒரு நபரை தொல்லை செய்ய விரும்புகிற ஆன்லைன் உள்ளடக்கத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. .விசாரணை முடிந்து  அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்து   தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கார்டூனிஸ்ட் பாஹ்மி ரேசா

இது குறித்து பாஹ்மி ரேசாவின் வக்கீல் சியாரெத்சான் ஜோஹன் “இந்த தண்டனை எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்” என்று தெரிவித்தார்.

இதே போன்று மற்றொரு கோர்ட்டிலும் பாஹ்மி ரேசா இன்னொரு வழக்கை சந்தித்து வருகிறார்.மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அரசு பணத்தில் பல கோடி ஊழல் செய்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசுக்கு எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சி  தலைவர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து, பாஹ்மி ரேசா செயல்பட்டு வருகிறார். போராட்டங்களிலும் பங்கு எடுத்து வருகிறார். இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுகிற இணைய தளங்களை மலேசிய அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.