கோலாலம்பூர்

லேசியாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தினமும் இலவச காலை உணவு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு அப்போதைய காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்த காமராஜர் பள்ளிகளில் அதிகம் குழந்தைகள் வராததைக் கண்டு ஆய்வு  நடத்தினார். அந்த ஆய்வில் பல குழந்தைகள் உணவின்றி வாடுவதால் ஏதேனும் பணிக்கு அவர்கள் பெற்றோர்கள் அனுப்புவதை அறிந்து மனக்கவலை அடைந்தார். அதையொட்டி மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு அமல் படுத்தினார்.

உணவுக்காகப் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் அவர்கள் கல்வி கற்பார்கள் என்னும் எண்ணத்தில் அவர் இத்திட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு அதை எம் ஜி ஆர் சத்துணவுத் திட்டமாக விரிவு செய்தார் . காமராஜரின் இந்த திட்டம் இன்று வரை பல நாட்டினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்தோ அறியாமலோ மலேசிய அரசு அந்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச காலை உணவு அளிக்கும் திட்டத்தை அமல் படுத்த உள்ளது.

மலேசியக் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், “குழந்தைகளுக்குச் சரிவிகித உணவு அளிப்பதன் மூலம் அவ்ரக்ள் தங்கள் கல்வியில் கவனத்தைச் செலுத்த இயலும். குழந்தைகள் உணவு குறித்து கல்வி அமைச்சகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குழந்தைகளுக்குச் சத்து அளிக்கும் உணவை வழங்கத் தேவையான பல  நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம்.

அந்த வரிசையில் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு வரும் 2020 ஜனவரி மாதம் முதல் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை இந்த அமைச்சகம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குச் சுவையான மற்றும் சத்தான உணவு அளிக்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசமாக அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்வுடன் வருவார்கள்” என அறிவித்துள்ளார்.