மும்பை

மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் வாரம் ஒரு முறை நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் வருடம் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில்  சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பேர் மரணம் அடைந்தனர்.   இந்த குண்டு வெடிப்பு குறித்து  தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்தனர்.   இந்த வழக்கில் சாத்வி பிரக்ஞா தாகுர், உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2017 ஆம் வருடம் சாத்வி பிரக்ஞா தாகுர், லெப்டினண்ட் கர்னல் பிரசாத்புரோகித் உள்ளிட்ட பலர் ஜாமீனில் வெளி வந்தனர்.   தற்போது சாத்வி போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வருகிறார்.   இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் விசாரணையின் போது நீதிமன்றத்துக்கு வருவதில்லை என்பதால் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. அதை ஒட்டி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வாரத்துக்கு ஒருமுறையாவது நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள்து.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரக்ஞா தாகுர், பிரசாத் புரோகித் ஆகியோர் வழக்கு விசாரணையின் போது வராததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்த வழக்கு வரும் 20 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.