கொழும்பு: அனைத்துவகையான லீக் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இலங்கையின் லசித் மலிங்கா.

2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில், மும்பை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் மலிங்கா. அந்த தகவல் வெளியான சிலமணி நேரங்களில், தனது லீக் போட்டி குறித்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் மலிங்கா.

இவர், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை தொடருடன், டி-20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிரணி வீரர்களிடம் வம்பு வளர்க்காமல், தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் வீரர்களில் மலிங்காவும் குறிப்பிடத்தக்கவர்.

அவர் கூறியுள்ளதாவது, “என்னுடைய குடும்பத்தாருடன் நடத்திய ஆலோசனைக்குப்பின், நான் அனைத்துவிதமான லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இது சரியான நேரம் என நினைக்கிறேன்.

கொரோனா பரவல் சூழலில், நான் எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாத கடினமான நேரமாக எனக்கு அமைந்துவிட்டது. என்னுடைய முடிவு குறித்து மும்பை அணி நிர்வாகத்திடம் கலந்து பேசினேன். அவர்கள் அடுத்துவரும் ஐபிஎல் ஏலத்துக்கு தயாராகும் நிலையில் இந்த முடிவை முன்கூட்டியே அறிவித்தேன்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் இருந்தவரை, என்னை குடும்பத்தில் ஒருவராகவே நடத்தினர். களத்திலும், வெளியிலும் 100% நம்பிக்கையளித்து, ஊக்கமளித்து நான் சிறப்பாகச் செயல்பட வைத்தனர்.

நான் கிரிக்கெட் போட்டிகளில் சுதந்திரமாக செயல்படவும் மும்பை அணி நிர்வாகம் அனுமதித்தது. மகிழ்ச்சியான நினைவுகளை சுமந்துகொண்டு, மும்பை அணி நிர்வாகத்துக்கு நன்றி செலுத்தி விடை பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 122 ஆட்டங்களில் ஆடியுள்ள மலிங்கா, 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 13/5 என்பதே அவரின் சிறப்பான ‍ஐபிஎல் பந்துவீச்சு.