லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில்உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மீரட் மாநகராட்சி தேர்தல் வாக்குபதிவின் போது ஒரு வாக்குசாவடியில் உள்ள எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக சின்னமான தாமரைக்கு ஓட்டுக்கள் பதிவானது.

பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளரான தஸ்லிம் அகமது என்பவர் ஓட்டு போட்ட போது பாஜக.வுக்கு பதிவானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஓட்டு எந்திரத்தை ஆய்வு செய்தனர். அவர் சொன்னது போலவே எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அது தாமரை சின்னத்துக்கு பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலறிந்த எதிர்க்கட்சியினர் வாக்குசாவடி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. உயர் அதிகாரிகள் வந்து மாற்று எந்திரம் மூலம் வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்தினர். இந்த எந்திரத்தில் ஏற்கனவே ஓட்டு போட்டவர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்டு மறுபடியும் அவர்கள் ஆன்-லைன் மூலம் ஓட்டு போட ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மண்டல தேர்தல் அதிகாரி பிரபாத் குமார் கூறுகையில், ‘‘ ஓட்டு எந்திரத்தில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை. எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இப்படி நடந்து விட்டது. ஒரு நபர் ஓட்டு போட்டதும் எந்திரம் தானாக ‘லாக்’ ஆகிவிடும்.

அடுத்த நபர் ஓட்டு போடும் போது மீண்டும் செயல்படும். ஆனால், இந்த எந்திரம் கோளாறு காரணமாக லாக் ஆகவில்லை. எனவே தான் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு விழுந்துள்ளது. இது, எந்திர கோளாறை தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றார்.