மே.வங்க மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக திரினாமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

புருலியாவியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து பழங்குடியின மக்களை ஏமாற்றுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

“திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆட்களை இழுத்து கட்சியை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயல்கிறது” என குறிப்பிட்ட அவர் “இதனால், திரினாமூல் காங்கிரசை அடிபணிய வைக்க முடியாது” என தெரிவித்தார்.

“மாவோயிஸ்டுகளை விட பா.ஜ.க.வினர் மிகவும் ஆபத்து மிக்கவர்கள்” என மம்தா பானர்ஜி விமர்சித்தார்.

– பா. பாரதி