கொல்கத்தா: கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், முதலமைச்சர் மமதா பானர்ஜி ஒரு அறிவிப்பை ஜூன் மாத இறுதியில் வெளியிட்டார்.
அதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அந்த கிளப்பில், கொரோனாவில் இருந்து விடுபட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டம் ஆக 60 பேர் அதில் இணைந்துள்ளனர் என்று மமதா பானர்ஜி கூறினார்.  அவர்களுக்கு உணவு, தங்குமிடத்திற்கான செலவையும்  அரசு ஏற்றது. இதுபோன்ற கிளப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் என்றும் மமதா தெரிவித்தார்.
கொரோனாவில் தொற்றில் இருந்து குணம் பெற்றவர்களுக்காக மனநல ஆலோசனை கூட்டங்களையும் மேற்கு வங்க அரசு நடத்துகிறது. தொடர்ந்து பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வரும் மமதா பானர்ஜி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
தன்படி, கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறி உள்ளார். மேற்கு வங்க அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.