மும்பை

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகளைப் பின் தொடர்ந்தும் தொலைபேசியில் பேசியும் தொல்லைக் கொடுத்த வாலிபர் கைது

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  இவரது மகள் சாரா டெண்டுல்கர்.

இவரை  மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் பின் தொடர்ந்துள்ளார்.   சச்சினின் வீட்டு தொலைபேசி எண் எப்படியோ அந்த வாலிபருக்கு கிடைத்துள்ளது.

அந்த வாலிபர் 20 முறை சச்சின் வீட்டுக்கு தொலைபேசியில் பேசியுள்ளார்.    அப்போது அந்த வாலிபர் சாராவைப் பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார்.  அத்துடன்  சாராவை கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

குடும்பத்துடன் சச்சின் டெண்டுல்கர்

இது குறித்து சாரா மும்பை நகரிலுள்ள பாந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.    அந்த இளைஞர் மன நிலை பிறழ்ந்தவராக இருக்கக் கூடும் என சச்சின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

அதை தொடர்ந்து காவல் துறையினர்  புகாரை பதிவு செய்து அந்த வாலிபரின் தொலைபேசி எண்ணை டிரேஸ் செய்துள்ளனர்.  தொலைபேசி எண் டிரேஸ் செய்யப்பட்டதை ஒட்டி அந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினர் அந்த வாலிபரிடம் சச்சின் வீட்டு தொலைபேசி எண் அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.   விசாரணையில் அந்த இளைஞர் சாராவை திருமணம் செய்துக் கொள்ள தான் ஆசைப்பட்டதாக சாராவிடம் தெரிவித்துள்ளதாக கூறி உள்ளார்.

அவர் மனநிலை பிறழ்ந்தவரா என்னும் சந்தேகத்தில் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டம் இட்டுள்ளனர்.