சென்னை

மொபைல் மூலம் ஓடும் ரெயிலில் பெண்களை படம் எடுத்த முதியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10000 அபராதமும்வ் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டையில் வசித்து வரும் 58 வயதான முதியவரின் பெயர் பெரம்பை சண்முகம், கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் சென்னை செண்டிரலில் இருந்து செல்லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். அன்று அவர் ரெயிலில் பயணம் செய்த பெட்டியில் ஏராளமான பெண்கள் பயணம் செய்துள்ளனர். அவர் அப்போது ஆபாச படங்களை சத்தமாக வைத்து மொபைலில் பார்த்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் கோபம் அடைந்ததை ஒட்டி அவர் படங்களை நிறுத்தி உள்ளார். அதன் பிறகு அனைவரும் உறங்க தொடங்கியதும் வேட்டியை கழற்றி விட்டு உள்ளாடையுடன் நடந்துள்ளார். அத்துடன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை ஆபாசமாக தெரியும் கோணத்தில் மொபைலில் படம் எடுத்துள்ளார். அதை யாரோ பார்த்து விட்டு சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் சண்முகத்திடம் இருந்து மொபைலை பிடுங்கி உள்ளனர்.

மொபைலை பரிசோதனை செய்த போது அதில் ஏராளமான ஆபாசப் படங்களும் புகைப்படங்களும் இருந்துள்ளன. அத்துடன் அந்த ரெயிலில் பயணம் செய்த பெண்களின் புகைப்படங்களும் ஆபாசக் கோணத்தில் இருந்துள்ளது. அதை ஒட்டி அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டார்.

பெரம்பை சண்முகம் மீது பதியப்பட்ட வழக்கில் இன்று சென்னை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் முதியவர் பெரம்பை சண்முகத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்