டெல்லி:

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மட்டுமே பா.ஜ.க. முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

ஆனால், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு தற்போது ஆட்சி அமைப்பது அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ள சுயேட்சைகளின் கையில் தான் உள்ளது. அதனால் சுயேட்சை எம்எல்ஏ.க்களுக்கு அங்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மணிப்பூர், கோவாவில் ஆட்சி அமைக்க பாஜ குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனினும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் கோவாவில் ஆட்சி அமைக்கவும், மணிப்பூரில் ஆட்சி அமைக்கவும் இரண்டாம் இடம் பிடித்துள்ள பாஜ தற்போது திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

கோவா முதல்வராக பாஜ சார்பில் மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அம்மாநில கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக மணிப்பூரில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த ஒரு முஸ்லிம் சுயேட்சை எம்எல்ஏ இம்பால் விமானநிலையத்தில் இருந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து கடத்தப்பட்டுள்ளார். இதன் பின்னால் பாஜ உள்ளது.

இந்த கடத்தல் சம்பவம், ஆட்சி அமைக்க தயார் நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

தற்போது மணிப்பூரில் பாஜ நடத்தி வரும் குதிரை பேர நிகழ்வுகள் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இபோபி சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு பெரும்பாண்மை பலம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.