ஜெய்ப்பூர்:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் தேர்வு பெற்றதற்கான சான்றிதழ் அந்த தொகுதி தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எம்.பி.யாக தேர்வு செய்ய விரும்பிய காங்கிரஸ் தலைமை, அவரை ராஜ்யசபா எம்.பி.யாக முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி மதன்லால் சைனி மறைவை தொடர்ந்து காலியாக இருந்த அந்த தொகுதியில், மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 13ந்தேதி மாநில முதல்வர், துணை முதல்வர் உடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மன்மோகன் சிங் போட்டியிடுவதை தொடர்ந்து, அவரை எதிர்த்து போட்டியிட பாஜக மறுத்து விட்ட நிலையில், வேறு எந்தவொரு கட்சியும் போட்டியிட முன்வரவில்லை. இதனால், அவரது வெற்றி உறுதியான நிலையில், இன்று அவர், போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பப்பட்டது.

முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். அவர்  கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். அவரது பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது ராஜஸ்தானில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.