தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட எந்தவொரு படப்பிடிப்புமே தொடங்கப்படவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவுப் பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.
கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை என்பதுதான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவை வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சளி காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.
இப்படி சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவுப் பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரைப் பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்கக் கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறி ஆகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது.
சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
திரைத்துறை மட்டும் இன்றி மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவிட வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களையும் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.