சென்னை

முதல் முறையாக மாணவர்களுக்குச் சென்னையைச் சேர்ந்த பத்மா சேஷாத்ரி பள்ளி மொபைல் மூலம் தேர்வு நடத்த உள்ளது.

இணையம் என்பது மக்களுக்கு இன்றியமையாததாகி உள்ளது.   எல்லாமே நான் ஆன்லைன் மூலம் செய்து விடுவேன் என ஒருவர் தெரிவிப்பது பகட்டு என இருந்த நிலை மாறி தற்போது ஆன்லைன் மூலம் எதையும் செய்ய மாட்டேன் என்பவரை மக்கள் வித்தியாசமாக பார்க்கத் தொடங்கி உள்ளனர்.    அந்த அளவுக்கு இணையச் சேவை பல நடவடிக்கைகளுக்குத் தேவையாக உள்ளது.

தற்போது கல்வித் துறையிலும் இணையும் மூலம் கற்றல் நுழைந்துள்ளது.    ஒரு காலத்தில் மொபைல், லாப்டாப், டேப்லட் போன்றவை எடுத்து வரப் பள்ளியில் தடை செய்யப்பட்டிருந்தது.  தற்போது சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி  பள்ளியில் தேர்வு எழுத இன்று அனைத்து மாணவர்களும் 3ஜி அல்லது 4 ஜி வசதி கொண்ட மொபைலுடன் வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்தப் பள்ளியின் துணை தாளாளர் ஷீலா ராஜேந்திரன்,”இது வெளியார் துறையால் நடத்தப்படும் புவியியல் திறன் குறித்த தேர்வு என்பதால் நாங்கள் மொபைலை எடுத்து வர உத்தரவிட்டிருந்தோம்.  மற்றபடி எங்கள்  பள்ளியில் மொபைலுக்கு அனுமதி இல்லை.    அதே நேரத்தில் தற்போது அனைத்தும் ஆன்லைனில் இருப்பதால் இந்த பழக்கத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மற்றொரு பிரபல பள்ளியான கேஜி ஹை பள்ளியின் துணை தலைமையாசிரியை சிந்து சுனில், “எங்கள் பள்ளியில் லாப்டாப்கள், , டாப்லெட்டுக்கள் ஆகியவை உபயோகிக்க அனுமதிக்கிறோம்.   இந்த அனுமதி ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில்லை.   வீட்டுப்பாடம் செய்ய மட்டுமே ஆன்லைனை பயன்படுத்துகிறோம்.  இவ்வாறு ஆன்லைன் கற்றல் மூலம் மிகுந்த நேரம் மிச்சமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு லாப்டாப் மற்றும் டேப்லட்டுகளை பள்ளிகளில் அனுமதிப்பது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் சர்வதேச பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளிலும் உள்ளது.  இதற்குப் பெற்றோர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.