டில்லி:

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் வாகனப் பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய  போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்றத்தில், போக்குவரத்து வாகனம் தொடர்பாக திருத்தப்பட்ட மசோதாவை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் தாக்கல் செய்தார்.  அதில், புதிய வாகனப் பதிவு மற்றும் வாகன மறுபதிவிற்கான கட்டணம் பல  மடங்கு உயரும் வகையில் ஷரத்துக்குள் சேர்க்கப்பட்டு உள்ளன.

அதன்படி, தற்போது பயணிகளின் கார்களுக்கு வசூலிக்கப்படும் ரூ.600ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

அதுபோல இரு சக்கர வாகனம் பதிவு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.

கனரக வாகனங்களை புதுப்பிக்கும் வாகனங்கள் கட்டணம் ரூ. 2000ல் இருந்து ரூ. 40,000 ஆக உயர்த்தப்படுகிறது.

எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும் வகையில் வாகனப் பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.