பழங்குடி மக்களிடம்  கொள்ளை.. கொடூரத்தில்  மாவோயிஸ்ட்டுகள்..

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் மண்டலம் மாவோயிஸ்ட்டுகள், ஆதிக்கம் நிறைந்த பகுதி.

அங்குள்ள தண்டேவாடா, பாஸ்டர், பீஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில்,இவர்கள் ‘ராஜ்ஜியம்’ தான்.

ஊரடங்கு காரணமாக மாவோயிஸ்ட்டுகள் முன்பு போல் சுதந்தரமாக வெளியே வர முடிவதில்லை.

முன்பு மக்களோடு மக்களாகக் கலந்து, நகர்ப்புறங்களுக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இப்போது மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. மலைப்பகுதி கிராமங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

முன்பு, மாவோயிஸ்ட்டுகளுக்குத் தேவையான உணவைப் பழங்குடியினர் சமைத்துக் கொடுத்தனர்.

அவ்வப்போது, அதனை மாவோயிஸ்ட்டுகளின் தூதுவர்கள் வாங்கி செல்வார்கள்.

ஊரடங்கால், அது சாத்தியமில்லாமல் போயிற்று.

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்கி வரும், பழங்குடியின மக்களிடம் இருந்து, அவற்றை மாவோயிஸ்ட்டுகள் பறித்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.

அச்சம் காரணமாக அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளிப்பதில்லை.

ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில், மாவோயிஸ்ட்டுகள் உணவுக்குத் திண்டாடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் போலீசார் கூறினர்.

– ஏழுமலை வெங்கடேசன்