இன்று உலக காசநோய் தினம்- 

காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதுடன்  ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டு பிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

உலகக் காசநோய் எழுச்சியை ஒழிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் தேதி உலகக் காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1882-ஆம் ஆண்டு இதே நாளில் டாக்டர் ராபர்ட் கோச் காசநோயை உருவாக்கும் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டதை அறிவித்தார். அதன்பிறகே  காசநோய் அற்ற உலகை ஏற்படுத்த உலக நாடுகளின்  தலைவர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்கள் அடங்கிய அரசியல் அளவில் மட்டும் அல்லாமல், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், நகரத்தந்தைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமுதாயத் தலைவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், குடிமை சமூகத்தை முன்னெடுப்ப வர்கள், சுகாதாரப் பணியாற்றும் பிற பங்குதாரர்கள் ஆகிய அனைவரும் காச நோய் ஒழிப்பில்  கவனம் செலுத்தி வருகிறது.

காச நோய் ஒழிப்பில் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் இருந்தாலும், காசநோய் உலகின் ஒன்பதாவது பெரிய இறப்புக்கான காரணமாக இருக்கிறது. உலகளாவிய அளவில் 2016-ல் 1.04 கோடி மக்களுக்குக் காசநோய் உருவாகியுள்ளது மற்றும் 17 லட்சம் மக்கள் இந்த நோயால் மரணம் அடைந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலகக் காச நோயாளிகளில் பாதிப் பேர் (45.6 சதவீதம்) தென் கிழக்கு ஆசியப் பகுதியில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. உலகக் காசநோய்ப் பளுவில் நான்கில் ஒரு பகுதியை இந்தியா கொண்டுள்ளது.

மைக்கோ பேக்டீரியம் என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் பரவும் நோயே காசநோய். பெரும்பாலும் நுரையீரலே பாதிக்கப்படும். ஆனால் நுரையீரலுக்கு வெளியேயும் காச நோய் பாதிப்பு ஏற்படலாம். காசநோய் குணப்படுத்தவும் தடுக்கவும் கூடியது ஆகும்.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் காசநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தொடங்கப்பட்ட திட்டம் இது.

காசநோயை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க முன்னேறும் தேசிய உத்திசார் திட்டத்தில் ஒருங்கிணைந்த நான்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி கண்டறி (Detect)-சிகிச்சையளி (Treat) – தடு (Prevent)  கட்டு (Build).  2025 ஆம் ஆண்டுக்கு உலகம் முழுவதும் காச நோயை அறவே ஒழிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானித்து அதற்கான நடைமுறைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

காச நோயற்ற உலகை  உருவாக்க நாமும் துணையிருப்போம்…