சென்னை:

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட களத்தில் இருந்து 413 டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

ஒரு வாரத்திற்கு மேல் இரவு பகலாக இங்கு நடந்த போரட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.

1,473 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள், உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் என போராட்டக்காரர்கள் பயன்படுத்திய குப்பைகள் மலை போல் குவிந்து கடந்தது. எனினும் போராட்டத்தின் போது சில மாணவர்கள அந்த குப்பைகளை சேகரித்து பல இடங்களில் குவித்து வைத்திருந்தனர்.

போராட்டம் நடந்தபோதே மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது. ஆனால் கூட்டமும், தடுப்புகளும் இதற்கு இடையூறாக இருந்ததால் முழு அளவில் சுத்தம் செய்ய முடியவில்லை என் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது மெரினாவில் இருந்து மட்டும் 413 டன் குப்பைகள் அகற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.