’’ஆன்லைன்’’ மூலம் நடத்தப்படும்  கல்யாணம்,,கச்சேரி, கருமாதிகள்..

ஒட்டு மொத்த இந்தியாவை கொரோனா புரட்டிப் போட்டு விட்டது.

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட கல்யாணங்கள், ஆண்டவனால் நாள் குறிக்கப்படும் கருமாதிகள் என இப்போது எல்லாமே, ’வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நடக்க ஆரம்பித்து விட்டன.

மும்பையில் சரக்கு கப்பலில் பணிபுரியும் பிரீத்சிங் என்பவருக்கும், டெல்லியைச் சேர்ந்த நீத் கவுருக்கும் கடந்த 4 ஆம் தேதி மும்பையில் கல்யாணம் நடப்பதாக இருந்தது.

அனைத்து ஏற்பாடுகளும் -ரெடி.

இடையில் வந்தது, ஊரடங்கு எனும், இடி.

திருமண தேதியை மாற்ற மணமக்கள் விரும்பவில்லை.

‘’வீடியோ காலிங் ஆப்’’  வசதியைப் பயன்படுத்தி,  கல்யாணம் செய்து கொண்டார்கள்.

இக்கரையில் (மும்பை) மாப்பிள்ளை.

அக்கரையில் ( டெல்லி) புதுப்பெண்.

சரியாக 11.30 மணிக்கு உறவினர்கள் வாழ்த்துகளோடு, திருமணம் சுபமாய் நடந்து முடிந்துள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் கச்சேரியும் நடந்துள்ளது.

அடுத்து வருவது- கருமாதி நியூஸ்.

பெங்களூரூவில் பொறியாளராக இருக்கும் ரவீந்திரா என்பவரின் தாயார் தொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார்.

சனிக்கிழமை அவர் இறந்து போனார்.

ஊரடங்கு காரணமாக ரவீந்திராவால், தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை.

தாயாரின் இறுதிச் சடங்கு காட்சிகளை ‘ஆன் லைன்’’ மூலம் பார்த்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டார், பொறியாளர்.

– ஏழுமலை வெங்கடேசன்