சென்னை

மிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க  மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி பொது மக்களுக்குத் தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலம் மளிகை பொருட்கள் தொகுப்பு ரூ. 500க்கு வழங்க உள்ளது.   இதில் அனைத்து மளிகைப் பொருட்களும்  இடம் பெற்றுள்ளன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “கொரோனா பரவல் தமிழகத்தில்  பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவில் அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகம் பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்குப் போவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளீர்கள்.

எனவே நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், ஊரடங்கு உத்தரவின் விளைவாகப் பாதிப்புக்குள்ளாகி கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி பாதுகாத்திட அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அடுத்த பதினைந்து நாட்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் உயிர் வாழ்வதற்கு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை, உணவுப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைந்தபட்சம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 5000 தொகையும், குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிட வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  ரேஷன் அட்டை இல்லாதவர்கள், சர்க்கரை அட்டை உள்ளவர்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும்  இந்த நிவாரணம் கிடைக்க உரிய அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

தற்போது நியாய விலைக்கடையில் மளிகைப் பொருட்களின் தொகுப்பு ரூபாய் 500க்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலையை ரூபாய் 250 ஆக குறைத்து இதே அளவு பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கிட வேண்டும்.

அரசு அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது என அரசு அறிவித்துள்ள போதிலும் மொத்த நலவாரிய உறுப்பினர்களுள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினருக்கே இது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நலவாரியங்களிலும் மார்ச் 31 வரை பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 72,97,446 ஆகும். இவர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள தலா ரூபாய் 1000 மற்றும் உணவுப் பொருட்கள் கூடுதலாக வழங்கிட வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் ஒரு பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடைபெற்று  சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் உள்ளது.  ஆனால் தேர்தல் நடைபெற்ற உள்ளாட்சிகளுக்கும், நடைபெறாத உள்ளாட்சிகளுக்கும் கொரோனா பாதிப்பு வந்ததிலிருந்து நிதி ஏதும் வழங்கப்படவில்லை.

பல ஊராட்சிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும். கொரோனா பாதிப்புக்கான சுகாதாரப் பணிகளையும் மேற்கொள்ள இயலவில்லை எனவும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவசரமாக நிதியினை ஒதுக்கித் தர வேண்டும்.

ஏற்கனவே கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மட்டும் இரண்டு நாள் கூடுதல் கூலி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் மிகச் சொற்ப அளவிலேயே பணிகள் நடந்துள்ளன. எனவே கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வழங்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா 10 நாள் கூலியை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவினை மீறியதாகத் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.  ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு மேல் அந்த வாகனங்களைக் காவல் நிலையத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்து விடுவது என்கிற அடிப்படையில் அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழியினை பெற்றுக் கொண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களது வாகனங்களையும் திருப்பி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.