புதுடெல்லி: கொலை செய்வதைவிட பெரிய குற்றம் எது என என்னைக் கேட்டால், ‘மேட்ச் ஃபிக்சிங்’ என்றுதான் சொல்வேன் என தன் அதிரடி கருத்தைக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் தோனி.

விரைவில் வெளியிடப்படவுள்ள ஒரு டாகுமென்டரி வீடியோவில் இக்கருத்தை அவர் பதிவுசெய்துள்ளார்.

மேட்சி ஃபிக்சிங் புகாரில் சிக்கியதை அடுத்து, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடைவிதிக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டுதான் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அப்போது, மீண்டும் களத்திற்கு வந்த தோனி, தன் அணியை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற வைத்தார்.

“2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர், மீண்டும் விளையாட வருவது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. அந்த மேட்ச் ஃபிக்சிங் சம்பவத்தில் என் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. உங்களை எது கொல்லவில்லையோ, அது உங்களை வலிமையாக்குகிறது.

என்னைப் பொறுத்தவரை, கொலைக் குற்றத்தைவிட பெரிய குற்றம் ‘மேட்ச் ஃபிக்சிங் -இல் ஈடுபடுவதுதான்” என்று ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்பதாக பெயரிடப்பட்டுள்ள 45 நிமிடங்கள் ஓடக்கூடிய டாகுமென்டரி படத்தில் கூறியுள்ளார்.

– மதுரை மாயாண்டி