சிட்னி: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை நடத்தியாக வேண்டுமென்பதற்காக ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன்.
இந்திய அணி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு, டி-20, ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், ஹைடன் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகெங்கிலும் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டிருப்பது வருத்தமான விஷயம்தான். ஆஸ்திரேலியாவில் பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
நாட்டின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருப்பதால், சர்வதேச அணிகள் பங்கேற்கும் தொடர்களை நடத்துவது சந்தேகமே. ஆனால், இந்தியத் தொடரை நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதேசமயம், உடல்நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் சமரசம் கூடாது. காலி மைதானங்களில் போட்டிகள் நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி தருகின்ற பட்சத்தில், டெஸ்ட் தொடரை நடத்தலாம். சுகாதாரத் துறை இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்” என்றார்.