மதுரா:

பிரபல நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி, மீண்டும் மதுரா தொகுதியில் போட்டி யிடுகிறார். ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட ஹேமமாலினி, இன்று தொகுதிக் குட்பட்ட பகுதிக்கு சென்று வயல்வெளியில் இறங்கி கோதுமை அறுவடை செய்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் பிரபல நடிகையும், நாட்டியத் தாரகையுமான ஹேமமாலினி. இவருக்கு இந்த முறையும் அதே மதுரா தொகுதியை பாஜக தலைமை வழங்கி உள்ளது. அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். இன்று  மதுரா தொகுதியில்  தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

தொகுதியில் உள்ள  வயல்வெளி பகுதிக்கு சென்ற ஹேமமாலினி விவசாயிகளிடமிருந்து கதிர் அறுக்கும் அரிவாளை வாங்கி, சில பயிர்களை அறுத்தும்,  அறுவடை செய்த கோதுமை பயிரை தன் இரு கரங்களால் பெற்றுக்கொண்டு, விவசாயியை போல செயல்பட்டார்.

பின்னர் அந்த பகுதி விவசாயிகளிடம் பேசிய,  ஹேமமாலினி, தான் மதுரா தொகுதிக்கு நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளதால் மக்கள் தன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும், எதிர்காலத்தில் தொகுதிக்கு இன்னும் பல நலத்திட்டங்கள் செய்வதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் ஹேமமாலினி,   இன்று என் மக்களவை பிரச்சாரம் துவங்கியது கோவர்த்தன் க்ஷேத்திரத்துடன், அங்கு வயல்களில் பணிபுரியும் பெண்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்று கூறி உள்ளார்.