சென்னை:

ரேஷன் கடைகளில்  சர்க்கரை மட்டுமே வாங்க பயன்படுத்தப்படும் வெள்ளைநிற ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் விருமபினால்,  அரிசி  வழங்கப்படும் பச்சை நிற ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.

சர்க்கரைக்கான ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசிக்கான ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

, “பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் 26.11.2019 வரை https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.