ன்று உலகம் முழுவதும் உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் (who)  கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதம்அதிகரிக்க முக்கிய காரணம்  உயர் இரத்த அழுத்தம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.  உலகம்  முழுவதும் உள்ள 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்கள் மற்றும் குழுக்களின் அம்ப்ரல்லா அமைப்பான தி வேர்ல்ட் ஹைபர்டென்ஷன் லீக் (டபிள்யூஹெச்எல்), உலகம் முழுவதிலுமுள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களின் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே உலக உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு மனிதருக்கு உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் என்ற இரண்டும் ஏற்படுவது வழக்கம்.  30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது சுருங்கழுத்தம்… 80 என்பது விரிவழுத்தம்.

இது எல்லோருக்குமே சொல்லி வைத்தாற்போல 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவது போல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம்.

இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம்   (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறார்கள். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம்   (Diastolic pressure)..  .

அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.

இந்தப் பிரச்சினையை மக்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005 ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது . அதன்தொடர்ச்சியே மே 17 ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக (டபிள்யுஹெச்டி) அறிவித்திருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக தேசிய சமூகங்கள் உலக சுகாதார நிறுவனத்தில் ஈடுபட்டிருக்கின்றன என்பதுடன் பொதுமக்களிடத்தில் செய்தியைக் கொண்டு செல்ல தங்களது நடவடிக்கைகளில் படைப்பாக்கத்தோடு செயல்படுகின்றன.

2007 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனத்தின் 47 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட சாதனை பங்கேற்பு நடைபெற்றது. உலக உயர் இரத்த அழுத்த தின வாரத்தின் போது, இந்த நாடுகள் அனைத்தும் – தங்களுடைய உள்ளூர் அரசாங்கங்கள், தொழில்முறை சமூகங்கள், அரசுசாராத அமைப்புக்கள் மற்றும் தனியார் தொழிற்துறைகளுடன் இணைந்து – சில ஊடகம் மற்றும் பொதுமக்கள் பேரணி மூலமாக உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தியிருக்கின்றன.

இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஜனரஞ்சக ஊடகத்தைப் பயன்படுத்துவதால் இந்தச் செய்தி 250 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களிடத்தில் சென்று சேர்கிறது. இந்த இயக்கம் வருடா வருடம் அதிகரிக்கையில், அதிகரித்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1.5 பில்லியன் மக்களை சென்று சேரும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

1. உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?

நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.

இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லை என்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?

1. நாம் உண்ணும் உணவின் தன்மை.
2. மன அழுத்தம்.
3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்.
5. உடல் எடை அதிகரித்தல்.
6. ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
7. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
8. உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
9. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
10. பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.

பக்கவாதம் (Stroke)

இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்க முடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.

பார்வை பறிபோகுதல்(Blindrers)

விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)

இரத்தக் கொதிப்பு இருப்பதே தெரியாமல் விட்டு விட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டு பண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

இதய நோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)

இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.

நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?

இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை

(1) சிஸ்டாலிக் அழுத்தம் – இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.

(2) டயஸ்டாலிக் அழுத்தம் – இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.

140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)

இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.

சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
சிஸ்டாலிக் 140 – 159
டயஸ்டாலிக் 90 – 99

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2
சிஸ்டாலிக் 160 – 179
டயஸ்டாலிக் 100 – 109

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 3
சிஸ்டாலிக் 180 – க்கு மேல்
டயஸ்டாலிக் 110 – க்கு மேல்

இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

மருந்து மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு குறைத்துக் கொள்ளல்:
உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:
தொழுகையில் மனதை ஒருமுகப்படுத்துதல், இறைதியானம்(திக்ர்) போன்றவற்றில் ஈடுபடுதல், யோகா ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி முறையாக பேணினால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:
தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:

நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரீதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.