டில்லி

குஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி இன்று நடக்கவிருந்த சோனியா மற்றும் ராகுல்காந்தி சந்திப்பை ரத்து செய்துள்ளார்.

 

மக்களவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுக்கு பின் பாஜக அல்லாத கூட்டணி அரசை அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதை ஒட்டி பல தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இன்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் முன்னாள் தலைவி சோனியா காந்தி ஆகிய இருவரையும் சந்திக்க பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயவதி திட்டமிட்டு இருந்தார். இந்த சந்திப்பின் போது சமீபத்திய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படும் என அரசியல் உலகில் எதிர்பார்ப்பு நிலவியது.

இன்று காலை பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி எஸ் சி மிஸ்ரா, “பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் சந்திப்பை ரத்து செய்துள்ளார். இன்று மாயாவதி எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க போவதில்லை. அவர் லக்னோவில் இருப்பார்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.