சென்னை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில்   கும்பாபிஷேக விழா வரும் 29 ம் தேதி நடைபெற உள்ளது.  இந் நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை உறுதி அளித்தது.

கோயில் ஊழியர்களை வைத்தே கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேக நிகழ்வு நேரடியாக யூ டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் உறுதியை ஏற்ற நீதிபதிகள், கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தியதோடு, விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்தனர்.