சென்னை:

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணிகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோவின் மதிமுக கட்சிக்கு ஒரு லோக்சபா, ஒரு ராஜ்ய சபா தொகுதிகள் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ராஜ்யசபா தேர்தலில் வைகோ தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு தொகுதியில் களமிறங்கு கிறார் என்று வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என தெரிவித்து உள்ளார்..

கணேசமூர்த்தி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு  வந்த பம்பரம் சின்னம், தொடர்ந்து தேர்தல்களில் மதிமுக தோல்வி அடைந்ததால், பம்பரம் சின்னத்தை வழங்க தேர்தல்ஆணையம் மறுத்துவிட்டது. இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் மதிமுக  திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுமா அல்லது தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேச்சைசின்னத்தில் போட்டியிடுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.