எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. கர்நாடக அரசு தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு, தீர்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து முறையான பதில் இல்லை. அதைப்போலவே ஹைட்ரோ கார்பன் உட்பட பல பிரச்சனைகள் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கின்றது. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்க தமிழக அரசு தவறிவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக வேண்டுமானால் முயற்சிக்கலாம். திமுக எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை, ஈடுபடவும் செய்யாது. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும். எங்கெங்கு போட்டியிடுவோம் என்பதை திமுக தலைமையுடன் பேசிவிட்டு, அதன் பிறகு அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.