திருப்பூர்

பிரதமர் மோடியை எதிர்த்து திருப்பூரில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதிமுக தொடர் ஒருவர் மின் டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி போராடியதால் கடும் பரபரப்பு உண்டாகியது.

பிரதமர் மோடி இன்று பல நலத் திட்டங்களை தொடங்கி வைக்க திருப்பூர் வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில் தொண்டர்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 11.15 மணி அளவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே திரண்டனர்.

அவர்களை கைது செய்ய பலமுறை காவல்துறையினர் முயற்சி செய்தனர். வைகோ காவல்துறையினரிடம் தாங்கள் அமைதியாக போராட்டம் நடத்துவ்தால் மோடி வந்து செல்லும் வரை போராட்டம் நடத்த அனுமதிக்க கோரிக்கை விடுத்தார். போராட்டம் வெகு நேரம் தொடர்ந்ததால் காவல்துறையினர் மீண்டும் கைது செய்ய முயன்றனர்.

மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென அருகிலிருந்த மின் டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி மோடியை எதிர்த்தும் கைது நடவடிக்கையை கண்டித்தும் முழக்கம் எழுப்பினார். இது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் பிறகு நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அந்த தொண்டர் கீழறங்கி வந்தார். அதன் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அந்திருந்து அப்புறப்படுத்த பட்டனர்.