கள்ளக்குறிச்சி:
ள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கு அழைப்பில்லை என்று கள்ளக்குறிச்சி எம்.பி.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் தெரிவித்து உள்ளர். அதிமுக அரசு, எம்.பி.க்களை அவமதித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். 
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் 8 மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ள நிலையில்,  9-வது புதிய மருத்துவ கல்லூரியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 4ந்தேதி  அடிக்கல் நாட்டினார்.
தலைமைச்செயலகத்தில் இருந்து கானொலிக் காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்குகொண்டனர். அந்த மாவட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கலூரி அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்த  கள்ளக்குறிச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணியை கூட இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்காமல் அவமதித்துள்ளது அ.தி.மு.க அரசு.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் தமிழக அரசிற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது,
4.7.2020 அன்று  தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வழியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்ததாக செய்திகள் வழியாக அறியக் கிடைத்தது.
சென்னை தலைமைச் செயலக நிகழ்ச்சியில் முதல்வர், சட்டத்துறை அமைச்சர், மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே வேளையில் கள்ளக்குறிச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவக் கல்லூரி வேண்டும் என பல முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எனக்கு இது குறித்த எந்தத் தகவலோ, அழைப்போ அனுப்பப்படவில்லை.
மேலும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவலோ , அழைப்போ அனுப்பப்படவில்லை. இந்த அப்பட்டமான நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு அவமதிப்பு கடுமையான கண்டனத்திற் குரியது. அரசு விதிகள் மற்றும் முறைமைகளின்படி (PROTOCOL) நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட வேண்டுமென்பது கட்டாயம். ஆனால் இந்த அ.தி.மு.க அரசு, எந்த விதிகளையும், மரபுகளையும் பின்பற்றுவதில்லை என்பது இப்போதைய விதியாகவே மாறிவிட்டது என்பதுதான் அவமானம்.
மருத்துவக் கல்லூரிக்காக நாடாளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ந்தேதி நடைபெற்ற குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்திப் பேசினேன். எனது தொடர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு , மருத்துவக் கல்லூரிக்கான அரசாணை வெளியானதும், அது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களே, அந்தத் தகவலை 23.1.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக எனக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
அதன் பின்னர் பிப்ரவரி 12ந் தேதி அன்று மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களை நேரில் சந்தித்து நன்றிக் கடிதத்தையும், இந்த ஆண்டே மருத்துவக் கல்லூரிப் பணிகள் துவங்கப்பட வேண்டு மெனவும் வலியுறுத்தி கடிதத்தை கொடுத்தேன். மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் வெளியானது.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி உருவாக இத்தனை முயற்சிகள் எடுத்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறைந்தபட்ச தகவல் கூட இல்லாமல், நேற்றைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள மாண்பை அவமதிப்பது, அவர்களுக்கான உரிமைகளை மீறும் செயலாகும். நாடாளுமன்ற உறுப்பினர் தனிமனிதரோ அல்லது கட்சி சார்ந்த மனிதரோ அல்ல, அவர் மக்களின் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை பிரநிதித்துவம் செய்பவர். எனவே எம்.பி-யை அழைக்காமல் நிகழ்ச்சியை நடத்துவது மக்களை அவமதிக்கும் நடவடிக்கையே.
இந்திய அரசியலமைப்புச் சட்டவிதிகளை அறிந்தே மீறியது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே, மேற்படி செயலுக்கான தக்க விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும்.
மேலும் இதுதொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையையும் , அனுமதியையும் பெற்று மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கழகத் தலைவர் அவர்களின் அனுமதி பெற்ற பின் கள்ளக்குறிச்சியில், இந்த அவமதிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதேபோல் தலைவரின் அனுமதியோடு நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்படும் என எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.