சென்னை:

காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் இன்று அனுமதி கோரி கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தமிழக சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும்,  இதுதொடர்பாக  மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நெல் கொள்முதல் நிலையம் திமுக பொருளாளர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ்,  காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

டெங்கு காய்ச்சல் இறப்பு குறித்து  திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,   9 மருத்துவக் கல்லூரி உள்பட சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிக்கிறது. இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சி உறுப்பினர், குற்றம்குறைகளை தேடி பேசுகிறார் என்றார்.

அதற்கு பதிலடி கொடுத்த  திமுக பொருளாளர் துரைமுருகன், மலராக இருந்தால் பரவாயில்லை, காகித பூவாக இருந்தால் என்ன செய்வது என்றார்.