சென்னை: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில், அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித் குமாருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகஅரசு அறிவித்தபடி இன்று தொடங்கியது. அரசு பள்ளி  மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடித் தடுப்புகள், பெற்றோர் அமரும் இடம், உணவு அருந்தும் இடம் என தனித்தனி பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு நேரு விளையாட்டரங்க கதவு திறக்கப்பட்டு கலந்தாய்வுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய கலந்தாய்வில், அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.   7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) 268 முதல் 633 தரவரிசையில் (நீட் தேர்வில் 189 முதல் 133 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 634 முதல் 951 தரவரிசையில் (நீட் தேர்வில் 132 முதல் 113 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்குபெற உள்ள மாணவ-மாணவிகளுக்கான அழைப்பு கடிதத்தை www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.inஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்படாது என்றும், கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாக, கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு வந்துசேர வேண்டும் என்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.