சென்னை:

மிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினருடன் முதல் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை 10 மணிக்கு சென்னை கோட்டையில் உள்ள கூட்ட அரங்கில் இந்த ஆலோசனை நடைபெற்றது.  கூட்டம் முடிவடைந்ததும், செய்தியாளர்களை சந்தித்த  மருத்துவ குழுவினர், மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரை செய்ய வில்லை என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரடைந்துள்ள நிலையில், ஜூன் 30ந்தேதி வரை ஊரடங்கு 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு (ஜூன் 30) முடிவடை கிறது.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே கொரோனா பரவல் தீவிரம் காரணமாக,  மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது. அதன்பிறகு செய்தியளார்களை சந்தித்த மருத்துவ குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மருத்துவ குழுவினரின் தலைவரான ஐசிஎம்ஆர் விஞ்ஞானியான டாக்டர் பிரப்தீப் கவுர் கூறும்போது, நாங்கள் அரசிடம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து  பரிந்துரைக்கவில்லை; இது எல்லா நேரங்களிலும் ஒரு தீர்வு அல்ல என்றார்.

கொரோனா பரவல் தீவிரமான பகுதிகள், தடுப்பு நடவடிக்கையில்  திருப்திகரமாக இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம், எல்லா பகுதிகளிலும் ஊரடங்கை  செயல்படுத்துவது தேவையில்லை, அதை  நாங்கள் பரிந்துரைக்கவில்லை;

ஊரடங்கு என்பது ஒரு  சுயசோதனை  கருவி – இது எல்லா நேரங்களிலும் ஒரு தீர்வு அல்ல; சென்னையில் பூட்டுதல் காரணமாக நோய்த்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு  மடங்காக  அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பரவுதல் குறைந்துள்ளது. அதற்காக நாம் நாம் எப்போதும் பூட்டப்பட்ட நிலையில் இருக்க முடியாது.

உலக சுகாதார அமைப்பு (WHO)  சுகாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒரு மாவட்டம் அல்லது தாலுகாவில் கொரோனா பரவல்  நிலைமையை மதிப்பீடு செய்ய வேண்டும்; அங்கு நிலைமை  திருப்திகரமாக இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட லாம்; எனவே எல்லா பகுதிகளிலும் பூட்டுதலைச் செயல்படுத்துவது தேவையில்லை

சென்னையில் கொரோனா பாதிப்பு அருந்தாலும், நகரத்தில் குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நகர்ப்புற மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு ஸ்பைக் உள்ளது.

சென்னையில் நடைமுறைப்படுத்தப்படும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை திருச்சி, வேலூர்,திருவண்ணாமலை,மதுரை மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டும். பொது போக்குவரத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.