சென்னை,

ர்நாடகா காவிரியில் மேகதாது அருகே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடக அரசு காவிரி தண்ணீரை தடுத்து நிறுத்த மேகதாது பகுதியில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக  5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொழிநுட்ப அனுமதி மற்றும் முழுத் திட்ட அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது கர்நாடக அரசு.

இந்தத் திட்டத்தில், கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்குக் கடிதம்மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு எழுதியுள்ள கடிததத்தில் கூறியிருப்பதாவது

“கர்நாடக அரசு தமிழ்நாட்டைக் கலந்தாலோசிக்காமல் முழுத் திட்ட அறிக்கையை அனுப்பி யுள்ளது. இது ஏற்கெனவே வெளியான தீர்ப்புக்கு எதிராக உள்ளது. அதனால், தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல் மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒப்புதலுக்காக, கர்நாடக அரசு தமிழகத்தைக் கேட்காமல் மனு ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்புதலை காவிரிப் பிரச்னை முடியும் வரை வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே, இது குறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் குறித்தும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதுகுறித்து பாராளுமன்றத்தில் திமுகவை சேர்ந்த தமிழக. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் மேல்சபையில் கேள்வி எழுப்பியபோது,  மத்திய நீர்வளத் துறை இணை யமைச்சர் சார்பாக  அளித்த பதிலில், காவிரி நதியின் குறுக்கே புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற அனுமதி இல்லை என்றும்,

மத்திய மேற்பார்வைக்குழு ஆய்வு செய்யாதவரை மேகதாதுவில் கர்நாடக அரசு எந்த புதிய திட்டத்தையும் தொடங்க கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், புதிய நீர்மின் திட்டத்துக்காகவும், குடிநீர் திட்டத்துக்காகவும் மேகதாதுவில் தடுப்பணை கட்டுவோம் என கர்நாடகா அரசு பிடிவாதமாக கூறி வருகிறது.