ஸ்ரீநகர்: கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறைபடுத்தப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, இன்று விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவுக்கு வரும் நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால், மெஹ்பூபாவின் விடுதலைக் குறித்து டிவீட் செய்திருந்த நிலையில், அந்தப் பெண் தலைவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
‘மெஹ்பூபா முப்தியை எவ்வளவு நாட்களுக்கு சிறையில் வைத்திருப்பீர்கள்?’ என்று மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது.
மேலும், இதுதொடர்பாக 2 வாரகால அவகாசம் அளித்திருந்த உச்சநீதிமன்றம், அதற்குள் சிறைவாச கால விபரத்தை தெரிவிக்கும்படி ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. எனவே, அக்கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மெஹ்பூபா இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
“மெஹ்பூபாவின் சட்டவிரோத தடுப்புக் காவல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நெருக்கடியான நாட்களில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இல்திஜா பாடுகிறாள்! கடவுள் உங்களைக் காக்கட்டும்” என்று டிவீட் செய்துள்ளார் மெஹ்பூபாவின் மகள் இல்திஜா முப்தி.