ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராயை ஆட்டுவித்த சரோஜ்கான்..

பிரபல இந்தி நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் மும்பையில் நேற்று இறந்து போனார்.

3 முறை தேசிய விருது பெற்ற அவர், 2 ஆயிரம் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்தி ரசிகர்கள் தெரிந்துள்ள அளவுக்கு, சரோஜ்கான் தமிழில் அத்தனை தூரம் பரிச்சயம் ஆனவர்  இல்லை.

ஆனால் அவரது பாடல்களைச் சொன்னால் , ‘அட! அவரா? என்று புருவம் உயர்த்தி ,வியந்து போவார்கள்.

‘’ ஏக் தோ தீன்’’ ‘’ சோலிக்கே பீச்சே கா ஹை’’ ஆகிய பாடல்களை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்த நடன இயக்குநர் தான் –சரோஜ்கான்.

இந்த பாடல்கள் மூலம் மாதுரி தீட்சித்துக்கு பெரும் ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தவரும் அவரே.

’மிஸ்டர் இந்தியா’’ படத்தில் ஸ்ரீதேவி ஆடிப்பாடும்’ ஹவா ஹவா ஹை’’ பாடல், இவரது ’கால்’ வண்ணத்தில்  உருவான பாடல்.

’நகினா ’ படத்தில் ஸ்ரீதேவி பாம்பு போல் சுழன்று சுழன்று ஆடும், ‘’ மே தேரி துஷ்மன்’ பாடலுக்கு நடனம் அமைத்து, ஸ்ரீதேவியின்  புகழை உச்சத்துக்குக் கொண்டு போனவர், சரோஜ் கான்.

 

ஐஸ்வர்யா ராய்,காஜல் உள்ளிட்டோரும் இவரால் ஆட்டு விக்கப்பட்டவர்கள் தான்.

கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ முக பாவனைகளோடு பாடி,ஆடும்போது , அவர்கள் பின்னால் நின்று கொண்டு -’’கூட்டத்தோடு கோவிந்தா’ போடுவது போல் நடன அசைவுகள் காட்டும் பின்னணி நடன நடிகையாக சினிமா பயணத்தைத் தொடங்கியவர், சரோஜ்கான்.

அப்போது அவருக்கு வயது- மூன்று.

நேற்று மரணிக்கும் போது, வயது- 71.

-பா.பாரதி.