லக்னோ:

26 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை காலத்தில் 22 ஆண்டுகள் அந்த கைதி மனநல மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் தண்டனை காலமான 20 ஆண்டுகளை கடந்து அவர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகேந்திர தயாள், தினேஷ்குமார் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞச் கைதி நாகேஸ்வர் சிங்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தனர். 1981ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இரு கிராமங்களுக்கு இடையிலான சிவில் பிரச்னையில் சமாதானத்திற்கு வர மறுத்து பிந்தேஸ்வரி சிங் என்வரது 5 வயது மகனை கொலை செய்த வழக்கில் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி நாகேஸ்வர் சிங்குக்கு சுல்தான்பூர் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து நாகேஸ்வர் சார்பில் மேல் முறையீட்டு மனு 1982ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. ஆனால், நாகேஸ்வர் தரப்பில் 11 ஆண்டுகளுக்கான பிணைய பத்திரம் தாக்கல் செய்யதில்லை. இதனால் சிறையிலேயே இருந்த அவர் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். எனினும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இதனால் நாகேஸ்வருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு அலகாபாத் நயினி மத்திய சிறையில் இருந்து வாரனாசி மனநல மருத்துவமனைக்கு 1986ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2007ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அவர் ஜாமினில் விடுதலை செய்யப்படடார். மேல் முறையீட்டு வழக்கில் அவரது வக்கீல் ஆஜராகாதால் நாகேஸ்வருக்கு2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிடிவாரன்ட பிறப்பி க்கப்பட்டது.

2016ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அவரை போலீசார் கைது செய்து சுல்தான்பூர் சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த மார்ச் 15ம் தேதி முதல் அவர் மீண்டும் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இதை தொடர்ந்து மே 18ம் தேதி அவரது இரு மகன்களுக்கும் சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். தங்களது தந்தையை நேரில் வந்து கவனித்து கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம், தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தியாக மாநில அரசையும், எதிர் தரப்பு வக்கீலையும் கடுமையாக விமர்சனம் செய்து, நாகேஸ்வரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.