டில்லி,
நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி போன்றவை பற்றி விஜய் கருத்து கூறியதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பாரதியஜனதா கட்சி தலைவர்கள் பகிரங்கமாக அந்த வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என படத்தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகிறார்கள்.
இந்நிலையில், மெர்சல் படம் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
மெர்சல் படத்தில் சில வசனங்களை நீக்க பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது. ஒருவேளை பராசக்தி படம் இப்போது ரிலீசாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.
படம் எடுப்போர் கவனத்திற்கு, அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.