மீத்தேன் ஆய்வு

தூத்துக்குடி

திருச்செந்தூர்  அருகே உள்ள உடன்குடி மணிநகர் பகுதியில் மீத்தேன் ஆய்வு பணியில் ஈடுபட்ட ஓஎன்ஜிசி கள ஊழியர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

பொதுமக்களிடம் நிலத்தடி நீர் ஆய்வு என்றும், பாலம் கட்ட ஆய்வு என்றும்  பொய்களை கூறி ஆய்வு செய்ய முயற்சித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தென்மாவட்டங்களை குறித்து வைத்து ஓஎன்ஜிசி ஆய்வு நடத்த முன்வந்திருப்பது தென்மாவட்ட மக்களை ஆவேசமடைய செய்துள்ளது.

மத்தியில் மோடி தலைமையிலான பாரதியஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, தென் மாநிலங்களில், குறிப்பாக  தமிழகத்தை குறிவைத்து அழித்து வருகிறது.

ஏற்கனவே கூடங்குளம் அணுமின் திட்டம், மீத்தேன் வாயு, ஹைட்ரோகார்பன் திட்டம்,  ஷேல் கேஸ் ஆய்வு போன்ற திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தி, தமிழக விவசாய நிலைங்களை பாழ்படுத்தி, தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி வருகிறது.

நெடுவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் தென்மாவட்டங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளது.

தென் மாவட்டங்களில் சேட்டலைட் உதவியுடன் களஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம்.

பொதுமக்கள் ஓஎன்ஜிசி கல்லை பிடுங்கியபோது

அதைத்தொடர்ந்து உடன்குடி அருகே உள்ள மணிநகர் பகுதியில் செல்லும் கருமேனி ஆற்றில் ஆய்வுபணியை, யாருக்கும் தெரியாமல் திடீரென  தொடங்கியது.

அப்பகுதிக்கு நவீன கருவிகள் மூலம் வந்த தனியார் ஒப்பந்த ஊழியர்கள்  ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு இருப்பதை கண்டறியும் களப்பணிகளில் ஈடுபட்டனர்.

இதையறிந்த அந்த பகுதி பொது மக்கள் விசாரித்தபோது,  ஆற்றின் பாலத்தை உயர்த்துவது குறித்து  ஆய்வு செய்கிறோம் என்றும், வேறு சிலரிடம் சிலரிடம் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்கிறோம் பொய்கூறி வந்துள்ளனர். 

ஆய்வை முடித்துவிட்டு, அதில் ஓஎன்ஜிசி என்ற கல் நடப்பட்டது. இதையறிந்த அருகிலுள்ள ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையறிந்த அந்த பகுதி இளைஞர்கள்  கள ஆய்வில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆய்வு செய்த தனியார்  நிறுவன ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது, மீத்தேன் எடுப்பதற்கான ஆய்வு என்பது தெரிய வந்துள்ளது.

இது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்ததால், அருகிலுள்ள கிராம மக்கள் அலுகிலுள்ள நடுவக்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திவாகர் தலைமையில் திரண்டு வந்து, ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் நடப்பட்டிருந்த கல்லை அடித்து நொறுக்கினர். கல்லை தோண்டி எடுத்து வீசி எறிந்தனர்.

இதனால் ஆய்வுப் பணிக்கு வந்தவர்கள் ஆய்வை கை விட்டு எஸ்கேப்பாகினர்.

நெடுவாசலை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் ஓன்ஜிசி நிறுவனம் கால் பதிக்க ஆய்வைத் தொடங்கியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.