மேட்டூர்:  நடப்பாண்டில்  100 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள  கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளது. இதனால், உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக காவிரியில் வரும் தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 21ம் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து , நேற்று மாலை நிலவரப்படி  99.62 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. தற்போதைய நிலையில் (மதியம் 2.30 மணி நிலவரம்) அணையின் நீர்மட்டம், 100.02 அடியாக உள்ளது. நீர் இருப்பு 64.866/93.47 (டிஎம்சி) ஆக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து  27,077  கன அடியாகவும் உள்ளது காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 20,000 கன அடி நீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 850 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.