அதிமுக நிர்வாகி வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில், ரூ. 1 கோடியை இழப்பீடாக அளிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ம் தேதி சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஐடி பெண் ஊழியர் சுபஸ்ரீ சாலையில் வைக்கப்பட்ட அதிமுக நிர்வாகி குடும்ப திருமண பேனர் சரிந்து, லாரி மோதி பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பேனர் வைக்க தொண்டர்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், தனது மகளின் மறைவுக்கு இழப்பீடாக தமிழக அரசிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தமிழக அரசு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு, பேனர் வைப்பதை தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இவ்வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரி தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 22ம் ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், தனது மகளின் இறப்புக்கு கூடுதல் இழப்பீடு தேவையெனில், மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை சுபஸ்ரீயின் தந்தை ரவி அணுகலாம் என்றும் நீதிமன்றம் அறிவுருத்தியது.