மும்பை:

கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புனே நோக்கி விஸ்தரா விமானம் 152 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் போபால் நோக்கி 109 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானமும் சென்று கொண்டிருந்தது.

மும்பை வான் பகுதியில் இந்த இரு விமானங்களும் மிக அருகில் பறந்துள்ளது. சுமார் 100 அடி தூர இடைவெளியில் பறந்ததை விமானங்களின் தானியங்கி எச்சரிக்கை கருவி சுட்டிக் காட்டியுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா பைலட் விமானத்தை பாதுகாப்பான இடத்தை நோக்கி இயக்கினார். இதனால் நடுவானில் நடக்க இருந்த பெரும் விபத்து சில விநாடிகளில் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘‘ஏர் இந்தியா விமானம் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை வழிகாட்டுதல் படி தான் சென்றுள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. விஸ்தரா விமான பைலட்களிடம் தான் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தில் உயரத்தை குறைப்பது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் கட்டுப்பாட்டு அறையுடன் நடந்துள்ளது’’ என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விஸ்தரா விமான பைலட்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.