சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி நகரில் பல தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இக்கு பீகார், அசாம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து தங்கிப் பணி புரிகின்றனர். இங்கு அதிகமாக உள்ள செங்கல் சூளையிலும் இவர்கள் பணி புரிகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் இவர்கள் சிங்கம்புணரியை விட்டு வெளியேற இயலாத நிலை ஏற்பட்டது. தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த தொழிலாளர்கள் நிறுவனங்களைத் தொடர்ந்து கேட்டு வந்தனர். ஆனால் நிறுவனங்கள் இந்த வேண்டுகோளை கண்டு கொள்ளவில்லை.
எனவே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி இன்று சிங்கம்புணரி காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதையொட்டி வட்டாட்சியர் பஞ்சவர்ணம், காவல்துறை ஆய்வாளர் சத்யசீலா ஆகியோர் சமாதானம் செய்தனர் இன்னும் 2 நாட்களில் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி அளித்ததை அடுத்து கலைந்து சென்றுள்ளனர்.