வெளிமாநில தொழிலாளர் மும்பையில் நுழைய என் அனுமதி வேண்டும்’’- ராஜ் தாக்கரே..

அனல் வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே, மிருதுவான தலைவராகத் தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

ஆனால் பால் தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவரும், அவர் காலத்திலேயே மகாராஷ்டிர நவநிர்மான் சேனா என்ற கட்சியை நடத்தி வருபவருமான ராஜ் தாக்கரே, முரட்டுப் பேர்வழியாகவே இருப்பவர்.

எப்போதாவது கர்ஜிக்கும் ராஜ் தாக்கரே என்ற புலியை இப்போது, கர்ஜிக்க வைத்துள்ளது, ஊரடங்கு.

பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்த உ.பி.மாநில தொழிலாளர்கள், ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிரமங்களைச் சந்தித்தனர்.

 இப்போது அவர்கள் சொந்த ஊர் திரும்பி வரும் நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.

‘’ வெளி மாநிலங்களில் வேலை செய்ய எங்கள் மாநில தொழிலாளர்கள் தேவை என்றால், எங்கள் (உ.பி.) அரசிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்’’ என்பது யோகியின் கருத்து.

மும்பை மாநகரம் தான், உ.பி. தொழிலாளர்களுக்கு  அதிக அளவில் வேலை கொடுக்கிறது.

உ.பி. ஆட்கள் இல்லாவிட்டால், மும்பை திணறிப்போகும் என்ற அர்த்தம் தொனிக்க யோகி தெரிவித்த கருத்து , ராஜ் தாக்கரேயை கொந்தளிக்கச் செய்துள்ளது.

‘’ இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேறு மாநில தொழிலாளர்கள் நுழைய வேண்டும் என்றால் எனது கட்சியிடம் அனுமதி பெற வேண்டும்’’ என்று முழங்கியுள்ள ராஜ்,’’  மகாராஷ்டிர அரசு மற்றும் போலீசிடமும் அனுமதி பெற வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

 இந்த கர்ஜனை பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்